முப்பது வருடங்களுக்கும் மேலாக வடகேரளத்துக்குத் தொடர்வண்டியில் பயணிக்க நேரும்போதெல்லாம் தவறாமல் கேட்டுவரும் ‘மங்களாபுரம்’ எனக் கேரளியர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘மங்களூர்’ நகரம். கடைசியெழுத்தான ‘ர்’ஐ உருட்டி இப்பொழுது ‘மங்களூரு’வாகியிருக்கும் மங்களூரை இருமுறைக் கடந்துபோக நேரிட்டிருக்கிறதே தவிர இறங்கிக் காலாறும் வாய்ப்புக் கிடைத்ததில்லை.
மாப்பிளாப்பாட்டு, மஅபர் – மலபார் பற்றிய உரையாடல்கள் வரும்போதெல்லாம் நண்பரும் ஆய்வாளருமான மிடாலம் அன்சார் மங்களூருவைப் பற்றிச் சொல்லிக்கொண்டேயிருப்பார். மலபாரின் வடக்கெல்லை துளுநாடு எனக் கேள்விப்பட்டிருந்ததினால் கொஞ்ச வருடங்களாகவே இப்பகுதிக்கு வரும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்தோம். வருடங்களாகக் காத்துக்கிடந்த சொற்கள் ஒருநாள் துள்ளிக் குதித்து ரிஹ்லாவாக துளுநாட்டிற்குள் வந்து விளைந்தன. ஏற்கெனவே அங்குத் தொடர்புகள் இருந்ததினால் ஏற்பாடுகளில் சிரமமிருக்கவில்லை.
மங்களூருவில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலை என இப்பயணத்தில் போக விரும்பிய பகுதிகளைப் பற்றி முன்னர் எண்ணியிருந்ததெல்லாம் திட்டமிடும்போது அனைத்தும் அருகருகே வந்து ஒட்டித் திரண்டுவிட்டன.
துளுநாடு ரிஹ்லாவில் முதன்முதலாக சென்றது மங்களூரு நகரத்தின் மையத்தில் உள்ள செய்தலீ பீவி தர்கா. இதனை ஒட்டி மங்களூரு காவல்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. இக்காவல்துறை அலுவலகத்திற்கும் இந்தத் தர்காவைப் பராமரிப்பதில் பங்குண்டு எனச் சொன்னார்கள். எதார்த்தத்தில் தர்காவின் வக்ஃபு நிலத்தில்தான் காவல்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. மேற்கண்ட செய்தி ஒரு பெரிய நிகழ்வின் படிமம் போல விளங்கியது.
பயணத்தின் முதல்நாள் வெள்ளிக்கிழமை. ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு இந்துத்துவ நாஜிச ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து இலட்சக்கணக்கில் உள்ளூர் முஸ்லிம்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் பலமுறை இந்துத்துவ நாஜிச அரசு அமைந்த பிறகும் தங்களுடைய இருப்பையும் வாழ்வையும் தொடர்ந்து நிலைநிறுத்தி வரும் மங்களூரு முஸ்லிம்களின் உறுதிப்பாடு மனங்கொள்ளத்தக்கது.
காலனியாதிக்கத்தைத் தீரமாக எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலீ, திப்பு சுல்தான் நிறுவிய கண்காணிப்புக்கோபுரம் அமைந்துள்ள சுல்தான் பத்தேரிக்குச் சென்றோம். கர்நாடக மண்ணில் பிறந்து தென்னகம் முழுமைக்குமான சிங்கங்களாக விளங்கியவர்களின் எச்சத்திலும் ஒரு நிமிர்வு.
இந்தியாவின் மிகப் பழைமையான பத்து பள்ளிவாயில்களில் ஒன்றும் கர்நாடகத்தின் இரண்டாவது பழைய பள்ளிவாசலுமான மாலிக் தீனார் பலிய பள்ளி என்ற ஜீனத் பக்ஸ் பள்ளிவாசலுக்கு ஜுமுஆ தொழச் சென்றோம். இப்பள்ளியில்தான் மங்களூரு நகரக் காழி செயல்படுகிறார்.
பிரபல பயண இலக்கிய எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான இப்னு பதூதா தனது ரிஹ்லத் நூலில் இப்பள்ளியின் காழியாக, பொதுவாண்டு 14ஆம் நூற்றாண்டில் பதுருதீன் மஅபரி அவர்கள் பணியாற்றியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மஅபர் என்பது தமிழ்நாட்டை அதிலும் குறிப்பாகக் காயல்பட்டினத்தைக் குறிக்கும் என்பது வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.கேரளத்துக்கும் முன்னரே துளுநிலத்துக்குத் தமிழ் மண்ணின் வழியாகத்தான் இஸ்லாம் சென்றடைந்துள்ளது.
இப்னு பத்தூதாவின் நூல் “ரிஹ்லா இப்னு பத்தூதா” என்று அறியப்படுகிறது. நூலின் முழுப்பெயர் تحفة النظار في غرائب الأمصار وعجائب الأسفار (துஹ்ஃபத்துன் னுள்ளார் ஃபீ கராஇபில் அம்ஸார் வ அஜாஇபில் அஸ்ஃபார்) என்பதாகும். இப்னு பத்தூதா தனது ரிஹ்லா நூலில் மங்களூரு பற்றிக் குறிப்பிடுவதாவது:
“ஃபாக்கனூர் (பார்கூர்) மன்னரிடமிருந்து விடைபெற்று மூன்று நாட்கள் விடாது பயணித்து நாங்கள் மஞ்சறூர் (மங்களூரு) அடைந்தோம். மங்களூரு மலைபாரில் பிரபலமான துறைமுகப் பட்டினங்களில் ஒன்றாகும். அங்குச் சுக்கும் மிளகும் கூடுதலான அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாரசீக, ஏமன் வணிகர்கள் இங்கிருந்து சுக்கும் மிளகும் கொள்முதல் செய்கின்றனர். ராமது (ராமதேவர்) என்ற பிரபல மன்னர் மங்களூருவை ஆளுகிறார். அங்குள்ள மக்கட்தொகையில் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ளனர். ஒரே பகுதியில் நாலாயிரம் முஸ்லிம்கள் வசிப்பதைக் கண்டேன். அங்கு நடைபெறும் வணிகம் மூலம் மன்னருக்கு நல்ல ஆதாயம் கிடைப்பதால் அவர்களுக்கிடையில் பிணக்கு ஏற்பட்டால் சுமுகமாகத் தீர்த்துவைக்க மன்னர் கவனமெடுத்துக்கொள்கிறார். அங்குக் காழியாக இருக்கும் பத்றுத்தீன் அல் மஅபரி அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அங்குக் காழியாகவும் நெறி பயிற்றுவிப்பவராகவும் உள்ளார். நாங்கள் பயணித்த கப்பல் மங்களூருவை அடைந்தபோது அவர் அன்புடன் வரவேற்று எங்களை உடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவ்வழைப்பை ஏற்று எங்களால் அவருடன் செல்ல முடியவில்லை. மன்னரின் மகன் அதிகாரப்பூர்வமாக வந்து எங்களை வரவேற்று தரையிறங்க இசைய வேண்டும் என்பதே அதற்குக் காரணமாகும்.
எங்களின் வருகையை அறிந்த மன்னர் தன் மகனை அனுப்பி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். மன்னர் அரச கண்ணியமளித்து எங்களைச் சிறப்பித்தார். அவரின் அரண்மனையில் மூன்று நாட்கள் தங்கினோம்.”
கோழிக்கோடு, மலப்புரத்தோடு சுருக்கிப் பார்க்கப்படும் இன்றைய மலைபார் என்றழைக்கப்படும் பகுதி உண்மையில் பண்டைய காலத்தில் தேங்காய்ப்பட்டினத்திலிருந்து மங்களூருவரை உள்ள பகுதிதான். தமிழ் முஸ்லிம் நிலத்தோடு அதாவது மஅபரோடு மங்களுருக்கு உள்ள தொடர்பு பற்றிப் பேசப்படவேயில்லை.

இப்பள்ளி அமைந்திருக்கும் பந்தர் பகுதி தமிழ் முஸ்லிம் புலவர்களைக் கண்ணியப்படுத்திய பகுதியாகும். மாப்பிளாப் பாடல்களின் பிதாமகனான மோயின் குட்டி வைத்தியரும் இங்குத் தனது பாடல்களை அரங்கேற்றியுள்ளார்.
ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு தேவைப்படுவோர் மதிய உணவுக்கான அட்டைகளை தன் அறையில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கத்தீப் அறிவித்தார். புரவலர்கள் கத்தீபிடம் இவ்வட்டைகளுக்கான பொருளுதவி செய்கின்றனர். பெறுபவர்களின் கண்ணியமும் பாதிக்கப்படாமல் கொடுப்பவர்களின் நோக்கமும் சிதையாமல் நிறைவேறும் நல்லதோர் ஏற்பாடு.
ரிஹ்லா போகுமிடங்களில் அந்தந்த ஊர்களின் தனித்துவமான உணவை அருந்துவது வழமை. மங்களுருவின் சிறப்புணவு மீன் என எங்கள் ஊர்தியின் ஒட்டுநர் சொல்லவும் மீன் உணவிற்காகப் பெயர் பெற்ற நாராயணா உணவகத்திற்குச் சென்றோம். பாதையோரம், ஏணிப்படிகள் எனக் கிடைக்குமிடங்களிலெல்லாம் ஆட்கள் காத்துக்கிடக்க வேறிடம் பார்க்க வேண்டிய கட்டாயம். மாட்டிறைச்சி வறுவலிலும் குஸ்காவிலும்தான் அன்றைய மதியத்தில் எங்களின் பெயர் எழுதியிருந்தது.
கர்நாடக துளு சாஹித்ய அகாதமியில் சந்திப்புக்கு மாலை மூன்று மணியளவில் ஏற்பாடாகியிருந்தது. திராவிட மொழிக் குடும்பத்தின் பழைமையான மொழிகளில் ஒன்றான துளு மொழியின் இருப்பு, அறைகூவல், வளர்ச்சி குறித்த ஓர் அறிதலுக்கான கூடுகையாக அதைத் திட்டமிட்டிருந்தோம்.
அங்கு இருபது நிமிடங்கள் தாமதமாகப் போய்ச் சேர்ந்தோம். எங்களை வாயிலில் நின்று வரவேற்றார் அகாதமியின் தலைவர் தாராநாத் கட்டி காப்பிக்காடு. நல்லதொரு கட்டடம். தூய்மையும் நேர்த்தியும் மிக்க அமைப்பு. நூலகம், கூட்ட அரங்கு, கேளரங்கு என எல்லாம் றாஹத்தாக இருந்தன. துளு அகாதமிக்கு வருடத்திற்கு எழுபது இலட்சங்கள்வரை கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறதாம்.
நிகழ்ச்சியை துளு மொழியோடு குறுக்கிவிடாமல் கொங்கணி, பியாரி மொழிகளின் சாஹித்ய அகாதமி பொறுப்பாளர்களையும் அழைத்திருந்தார் தாரா நாத். இப்பகுதிகளின் பழங்குடியான குரகர் சமூகப் பேராளர் ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தார்.
தென்னகத்தில், மொழியை கண்மூடித்தனமான வெறியாக மாற்றிப்பார்க்கும் ஒரே பகுதியான கர்நாடகத்தில் துளு, கொங்கணி, பியாரி உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளின் நிலையை அறிவதும் சங்க காலத்திலேயே தமிழுடனான தனது உறவை பிரிய வேண்டி வந்த துளு மொழியின் இன்றைய நிலையைப் புரிவதும் எங்கள் பயணத்தின் தலையாய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் தாக்கத்தையும் விளைவுகளையும் அறிவதற்கான சோதனைக்களம்தான் துளுநாடு பகுதி என்பதை இந்த ரிஹ்லா உணர்த்தியது. திருவிதாங்கூர் பயணத்தில் களியக்காவிளையிலும் இதுபோன்றதொரு பட்டறிவைப் பெற்றோம்.
நிகழ்ச்சி தொடங்கியது. கொங்கணி மொழியின் முன்னணி எழுத்தாளரான மங்களா பட் உரையாற்றினார். கௌட சரஸ்வத் பிராமணரான அவர், “கொங்கணிகள் தென்னிந்தியர்கள் என வடக்கிந்தியர்களாலும் வடக்கிந்தியர்கள் எனத் தென்னிந்தியர்களாலும் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றனர். கோவா மாநிலத்தின் மொழி என மஹாராஷ்டிரா, கர்நாடகம், கேரள மாநிலங்களாலும் பிராமண மொழி என பிறச் சாதிக்காரர்களாலும் நாங்கள் ஒதுக்கப்படுகிறோம்.. ஆனால் கொங்கணி மொழியோ தெற்கிலும் வடக்கிலும் கோவா, மஹாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் எனப்படும் மாநிலங்களிலும் எல்லா மத, சாதிக்காரர்களாலும் பேசப்படும் மொழி என்பதுதான் உண்மை.” என்றார்.
கொங்கணி மொழிப்பாடல்களை இளைஞி மேகா பய்யவரூ சுருதி சேர்த்து இசைபடப் பாடினார்.
இரு பியாரி மொழிப் பாடல்களை எங்களுக்காகப் பாடிய கலைஞர் முஹம்மது பட்டூரு எழுத்தாளர், நடிகர், கன்னடம், துளு, பியாரி, உர்தூ மொழிகளில் கவிஞர், தற்காப்புக்கலைகளைக் கற்றவர் என்ற மினுங்கும் பல பட்டடைகளைக் கொண்டவர். வயது எண்பதைத் தொட்டு நின்றாலும் தோற்றத்தில் பத்து வயது குறைவுதான்.
குரகர் என்ற பட்டியலினப் பழங்குடியிலிருந்து இரமேஷ் மஞ்சக்கல் வந்திருந்தார். அவர்களின் மொழியில் எங்களுக்குப் பேசியும் பாடியும் காண்பித்தார். குரகா மொழியும் திராவிட மொழிக் குடும்பம்தான். துளு, கொங்கணி, பியாரி மொழிகளுக்கு சாஹித்ய அகாதமி இருக்கும்போது குரகர் மொழிக்கு என ஒரு சாஹித்ய அகாதமி ஏன் இல்லை எனவும் கேள்வியெழுப்பினார்.
குரகர்களின் மொழியைக் கேட்டால் சாபம் கிட்டும் என ஆதிக்கச் சாதி ஹிந்துக்களால் ஒதுக்கப்பட்டிருந்த இப்பட்டியலினப் பழங்குடியினருக்கெதிராக இப்போதெல்லாம் நேரடி தீண்டாமை இல்லையென்றாலும் தங்களின் அடையாளம் பிற சமூகத்தினருக்கு தெரிய வந்தால் தாங்கள் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சமிருப்பதால் வெளியில் தங்களின் மொழியை குரகர்கள் பேசுவதுமில்லை. தங்களைக் குரகர் என அடையாளப்படுத்திக் கொள்வதுமில்லை.
முதலாம் நூற்றாண்டில் ஹபஷிகா என்ற அரசனைப் பெற்றிருந்த இச்சமூகம் இன்று ‘குறிப்பிடப்பட்ட அழியும் நிலையிலுள்ள பழங்குடியினராக’ வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,000 ஏன்ற எண்ணிக்கையிலிருந்த குரகர் சமூகம் 2011ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 1,500 என்ற எண்ணிக்கைக்குச் சுருங்கியிருக்கிறது. புகையும் கவிச்சியும் வராமல் நடந்து முடிகிற ஒரு துன்பியல் நிகழ்வு.
நிகழ்ச்சியில் பேசிய பிராமணப் படிப்பாளியும் பதவியாளியுமான பேராசிரியர் ஒருவர் திப்பு சுல்தானால் துளுநாட்டின் தொன்மங்கள் சூறையாடப்பட்டன என ஒரு தகவலை சொல்லிவிட்டுப் போனார்.
குரகர் சமூகத்தின் மஞ்சக்கல் இரமேஷ் பேசும்போது “நாங்கள் பொதுக்கிணற்றில் குடிநீரெடுக்க ஆதிக்கச் சாதி ஹிந்துக்கள் மறுத்தபோது திப்பு சுல்தான்தான் எங்களுக்கு அவ்வுரிமையை மீட்டுத் தந்தார் என்றார்.
வெட்டென இக்கூற்றை மறித்த அப்பிராமணர், “பார்கூர் பகுதியில் குரகர் சமூகத் தலைவனான நந்தராயன் வழங்கிய அன்னதானத்தைத் ‘தீட்டு’ எனப் பிற சாதியினர் ஒதுக்கவே அங்கு வந்த சைவ சமய யோகியொருவர் அந்தக் குரகர் இனத்தலைவனை ஒரு குளம் தோண்டச் சொல்லி அக்குளத்தை குரகர் இன மக்களுக்குப் புனிதமாக்கிக் கொடுத்தார். எல்லாச் சாதியினரும் பாசனத்திற்காக இக்குளத்து நீரைப் பயன்படுத்தி நெல் விளைவித்து பயன்படுத்தினர்” என ஒரு கதையை அவிழ்த்தார்.
அதோடு திப்பு பற்றி இரமேஷ் மஞ்சுக்கல் மேற்கொண்டு சொல்ல வந்தது தடைப்பட்டு போயிற்று. அந்தப் பேராசிரியரிடம் மேற்கொண்டு கேட்டதில் குரகர் இனப் பேராளர் சொன்ன திப்பு சுல்தானின் கிணற்று அனுமதி செய்தியை மறுத்தார். நந்தராயன் வெட்டிய குளத்தின் நீரை பிற சாதியினர் புனிதமாகக் கருதி பயன்படுத்தவாவது செய்கின்றனரா? எனக் கேட்டதற்கு ‘இல்லை’ என ஒற்றைச்சொல்லில் மறுமொழி வந்தது.
பிரபல திரைப்பாடகி சகோதரிகளான லதா மங்கேஷ்கரும் ஆஷா போஸ்லேயும் தேவதாசிக் குடும்பத்தில் பிறந்தவர்கள் எனவும் கூடுதலாக ஒரு தகவலை அவையோருக்கு வழங்கிவிட்டுச் சென்றார் பேராசிரியர். இவர்நாட்டாரியல், அருங்காட்சியகவியல், வரலாறு, கலை, பண்பாடு துறைகளில் பல உயர்பதவிகளை வகித்தவருங்கூட.
நிகழ்ச்சியின் நிறைவில் மொழிவாரி மாநிலப் பிரிவினையில் கர்நாடகத்தின் துளுநாட்டுக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டபோது துளுநாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய காசர்கோடு மாவட்டம் கேரளத்தோடு இணைக்கப்பட்டு மலையாளத்தின் ஆதிக்கத்தில் மொழிவாரியான நெருக்கடிகளைச் சந்திப்பதாகக் கூறினர்.
கர்நாடகத்தின் அலுவல் & பெருமொழியான கன்னடத்திலிருந்து துளு, பியாரி, கொங்கணி மொழிகளுக்கு அறைகூவல்கள் எதுவுமுண்டா? என்ற வினாவிற்கு அப்படியொரு சிக்கலை சந்திக்கவில்லை என்றனர். மாநிலத்தின் அலுவல் மொழியாகக் கன்னடம் இருந்தபோதிலும் துளு, பியாரி, கொங்கணி மொழியினர் தங்களுக்கிடையே துளுவில்தான் உரையாடிக்கொள்கின்றனர் என்ற செய்தி வியப்பூட்டியது.
நடப்பில் இம்மூன்று மொழிகளுக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் ஏராளமாகத் தென்படுவதோடு அது இம்மூவரையும் செழுமைப்படுத்தவே செய்திருக்கிறது.
பெரிய இலக்கியச் சாதனைகள் இல்லாதிருந்தும் இரண்டாயிரம் வருடங்களாய் கன்னடம், மலையாளம் என்ற இரு மாமத யானைகளுக்கிடையே நசுங்கிவிடாமல் இங்குக் கிளைத்துநிற்கும் ஏனைய வட்டார மொழிகளுடனும் உறவாடித் தழைக்கும் துளுவுக்கு வாழ்த்துகள்.
அகரமுதலி
மஅபர் – தமிழ்நாடு
மலபார் – கேரளம்
காழி – நீதிபதி
பந்தர் – துறைமுகம்
கத்தீப் – சொற்பொழிவாளர்
றாஹத் – ஆறுதல்
தென்னகத்தில் எனக்குப் பார்க்கக் கிடைத்த மரசெதுக்கு வேலைப்பாடுகளுள்ள பள்ளிவாயில்களில் சிறந்தது கவரத்தியிலுள்ள உஜ்ரா பள்ளிவாயில். அதற்கடுத்த இடத்தைப் பெறுவது மங்களூருவின் ஜீனத் பக்ஸ் பள்ளிவாயில்தான். காலத்தின் முனைகளில் பற்றியிருக்கும் தேனடைகள் போன்ற தலைக்கு மேலிருந்த மர வேலைப்பாடுகள் பழந்தேனில் திளைத்த உணர்வை வழங்கிக்கொண்டேயிருந்தது.
